டெல்லி: பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் உத்தரவை ஏற்று ராஜஸ்தான் சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் பதவிலிருந்து விலக வசுந்தரா ராஜே முன் வந்துள்ளார்.
இதையடுத்து அடு்த்த தலைவரை அவரே தேர்ந்தெடுக்கலாம் என்று அவருக்கு சலுகை தரப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் தோல்வியையடுத்து ராஜே எதி்ர்க் கட்சி்த் தலைவரானார். ஆனால், தோல்விக்குப் பொறுப்பேற்று அந்தப் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என அம் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரான ஜஸ்வந்த் சிங் கோரி வந்தார்.
ஆனால், அத்வானியின் ஆதரவோடு பதவியில் நீடித்தார் வசுந்தார்.
இந் நிலையில் ராஜ்நாத் சிங்குடன் கைகோர்த்த ஜஸ்வந்த் சிங், வசுந்தராவை பதவி விலகச் செய்ய மூத்த தலைவர்களின் ஆதரவைத் திரட்டினார். அவருக்கு யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோரின் ஆதரவு கிடைத்தது. மேலும் இவர்களுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்யாயின் ஆசிர்வாதமும் கிடைத்ததால் பதவி விலகுமாறு வசுந்தராவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மொத்தமுள்ள 78 எம்எல்ஏக்களில் 57 பேரை திரட்டி டெல்லிக்கு அனுப்பி தனது பலத்தைக் காட்டினார் வசுந்தரா. ஆனால், மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து வரும் 19ம் தேதி சிம்லாவில் பாஜக உயர் மட்டக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில் வசுந்தராவுக்காக வாதாடி மூத்த தலைவர்களுடன் மோத விரும்பாத அத்வானி இந்த எம்எல்ஏக்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
இதனால் அத்வானி வீட்டுக்கு எதிரே போராட்டம் நடத்திவிட்டு இந்த எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் திரும்பிவிட்டனர்.
அத்வானி கோஷ்டியைச் சேர்ந்த வசுந்தராவை அத்வானியே கைவிட்டுவிட்டு விட்டதால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்கு வசுந்தரா உள்ளானார்.
இதையடுத்து பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து அடுத்த தலைவரை தேர்வு செய்யும் சலுகை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வசுந்தராவின் இந்த பதவி விலகல் பாஜகவில் அத்வானியின் செல்வாக்கு மேலும் சரிந்துவிட்டதையே காட்டுகிறது.
தான் அத்வானியின் ஆதரவாளர் என்பதால் தான் தனக்கு எதிராக ஒரு கோஷ்டி செயல்படுவதாக வசுந்தராவே குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
lundi 17 août 2009
Inscription à :
Articles (Atom)